இரண்டு வாரங்களுக்குமுன் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இறந்துபோன எம்.கிருஷ்ணனின் உடல் இன்று இரண்டாவது சவப் பரிசோதனைக்காக காலை மணி 10.19-க்கு மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு (யுஎம்எம்சி) கொண்டு வரப்பட்டது.
அப்பரிசோதனை யுஎம்எம்சியின் உடல்கூறு பிரிவுத் தலைவர் டாக்டர் கே. மதிஹரன் தலைமையில் நடைபெறும்.
சவப்பரிசோதனை நடைபெறுவதை கிருஷ்ணன் குடும்பத்தாரின் வழக்குரைஞர்கள் என்.சுரேந்திரனும் குர்மிட் சிங் ஹல்லோனும் நேரில் காண்பார்கள். கிருஷ்ணன், 37, ஜனவரி 2-இல், போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக தாமான் மிஹார்ஜா கொண்டோமினியத்தில் மேலும் நால்வருடன் கைது செய்யப்பட்டார்.
ஆனால், தம் கணவர் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படுவதை அவரின் மனைவி ரேவதி, 37, மறுக்கிறார்
ஆறு குழந்தைகளுக்குத் தந்தையான கிருஷ்ணன், ஜனவரி 7-இல், புக்கிட் ஜாலில் போலீஸ் நிலைய லாக்-அப்பில் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.
இரண்டு நாள்களுக்கு முன்னர், உயர்நீதிமன்ற நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா முன்னிலையில் செய்துகொள்ளப்பட்ட ஒரு தீர்வின்படி போலீசும் சட்டத்துறை தலைவரும் கிருஷ்ணன்மீது இரண்டாவது சவப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அக்குடும்பத்தாரின் கோரிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்தனர்.
எச்யுகேஎம் மருத்துவமனையில் நடைபெற்ற முதல் சவப் பரிசோதனையில் குடல்புண் அழற்சியால் கிருஷ்ணன் மரணமுற்றார் என்று கூறப்பட்டது.ஆனால், குடும்ப உறுப்பினர்கள் அவருடைய உடலில் காயங்கள் நிறைந்திருப்பதைப் பார்த்த பின்னர் சவப்பரிசோதனை முடிவை ஏற்க மறுத்தார்கள்.
No comments:
Post a Comment